செம்புழுதி கால் பதித்து
சீருடை நாம் அணிந்து
கை கோர்த்து நடை பழகி
எம் மண் மீது புரண்டெழும்பி
பூவரசு இலை பறித்து
பீ பீ எல்லாம் செய்து ஊதி
வயல் வரப்பில் ஏறும்புகடிக்க
வாய்க்கால் பக்கம் ஓடி கழுவ
எட்டுக்கோடு கிளித்தட்டு
கிட்டிப்புள்ளு கிரிக்கெட்டு
பெட்டை பெடியள் சேர்ந்து விளையாடி
சிரித்த பொழுது இன்னும் என் நெஞ்சில்
ஆட்டிலறி குறிவைக்க
ஆயுதங்கள் வெறிகொள்ள
ஊர் சிதறி ஓடி ஒழிந்து
எட்டு திக்கும் சிதறி வாழ்ந்தோம்
பனையோரம் குந்தியிருந்து
பால் குடித்த கிழடுகளும்
பனை ஓலை பாயிலே
படுத்துகிடந்த வயதுகளும்
இன்னும் ஊரில் இருந்து புறு புறுக்க
நாம் மட்டும் ஓடி வந்தோம் தூர தேசம்
இன்னும் என் காதில் அவலக்குரல்
இன்னும் என்கண்ணில் சாவின் கோலம்
இன்னும் என் கால்களில் குருதி சிதறல்
நினைவுகளில் வந்தாலும்
மறுபடியும் மண்மிதித்து
வைரவருக்கு மடைபரப்பி
வயல் இரங்கி அறுவடை செய்ய
துடிக்கிறது என் இதயம்
Tweet | |||||