3/23/2012

துளிர்க்காமல் விடமாட்டோம்

அறுகம்புல் நுனியிலே

அழகாய் விழுந்த பனித்துளியே

உலகெரிக்கும் தணல் கொண்டு

வருகின்றான் சூரியனே

மெதுவாக கரைந்தோடு

இலையினிலே வழிந்தோடு – எம்

மனதுக்குள் உள்வந்து

கண்ணீராய் நீ மாறு


உச்சத்தில் இருப்பவர்கள்

உண்மைகளை அறிவதில்லை

கட்டாந்தரையில் இருக்கின்றோம்

கவலை சொல்கிறோம் நீ கேளு

சூரியனால் கருகுகின்றோம்

மழைவந்தால் நனைகின்றோம்

வெள்ளத்தில் அழுகிகின்றோம்

கரையான்களால் அழிகின்றோம்

குப்பை என்று எமைக்கொன்று

நெருப்புவைக்க சாகின்றோம்


பிறந்த இடம் பிழையா

பிறந்த இனம் பிழையா

வளர்ந்த முறை பிழையா

வாழ்வு நமக்கில்லையா

காற்றில் நாம் ஆடினோம்

நிமிர்ந்தே நாம் பாடினோம்

தனியாக வளராமல்

இனமாக நாம் படர்ந்தோம்


அழிந்தாலும் இனமானோம்

அழிய அழிய துளிர்கொண்டோம்

விடியலுக்காய் விழுதானோம்

விடியும் வரை உயிர்வாழ்வோம்

வடிவங்கள் மாறினாலும்

மரபனுக்கள் மாறவில்லை

எமக்கான எம்நிலத்தில் – நாளை

துளிர்க்காமல் விடமாட்டோம்

3/12/2012

அனாதையாய் அடிபட்டு


தன் உயிர்
தான் நேசித்த உயிர்கள்
உறவுகள் சொந்தம் பந்தம் நட்பு
ஒன்றன் பின் ஒன்றாக
மடியும் போது
கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது

பிறந்த பூமி
வாழ்ந்த வீடு
தோட்டம் துறவு வயல் இன்றி
அனாதையாய் அட்டிபட்டு
உணவுக்காய் கை ஏந்தி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்

3/03/2012

அண்ணா மட்டும் இருந்திருந்தால்


வேலியும் இல்லை
கூரையும் இல்லை
நரிகளிடம் இருந்தது தப்ப
நாய் வளர்க்கும் நிலைமை
நாய்க்கு வைக்க கூட
மிச்ச சோறு இல்லை
ஏன் மனுசருக்கே ஒருவேளைதான்
அதுவும் வேலை கிடைத்தால் மட்டும்
ஆனாலும் நாய் நன்றி உள்ள நாய்

கூரை வழியே வெளிச்சம் தெரியும்
வேலி இல்லாததால் வீடே தெரியும்
போர்க்கும் போர்வைதான்
அந்தரங்கச்சுவர்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
உறங்கும்நிலை .
வேறை என்னத்தை பிடிக்க .
அதுமட்டும்தானே மிச்சம் இருக்கு

எச்சத்திலும் ஏதோ ஒன்றை தேடி
அலையும் நரிகள்
கேவலம் கெட்டவனுக்கு
கிடைப்பதெல்லாம் அமிர்தம்தானே
ஆம்பிளை என்ற பெயருக்கு
அப்பா இருப்பதால்
மூத்த அக்கா இரண்டுபேரும்
ஓரளவுக்கு தூங்குகின்றார்கள்
அண்ணா மட்டும் இருந்திருந்தால்
நானும் தூங்கியிருப்பேன்
இப்படிக்கு சின்னதம்பி